சகடக் கவிதைகள் – 10

வந்தேறிகள்

- Advertisement -

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

வந்தேறிகள்….

ஆயிரம் வருட ஆலமரத்தடியில்
இளைப்பாற வந்த
இரு மனிதர்களின் சம்பாஷனை….

அவனை இவன் வந்தேறி என்றான்
இவனை அவன் வந்தேறி என்றான்

வெறுப்பிற்குத்தான்
எத்தனை ஆயுதங்கள் !
எத்தனை அவதாரங்கள் !

சொற்களை அம்புகளாக்கி
மொழியை வில்லாக்கி
ஏகலைவனாய் போர் புரிந்தார்கள்

இவன் சாதியைச் சொல்லி அடக்க நினைத்தான்
அவனோ அதையே கேடயமாக்கித் திருப்பி அடித்தான்

இவன் நிறத்தைச் சொல்லிப் பிரிக்க முயல
அவனோ மதத்தை நுழைத்து இழுத்தான்

வேடிக்கை பார்த்தவர்களோ கைதட்ட
இருபுறமும் கோஷ்டி சேர
உற்சாக மிகுதியில் உக்கிரமானது போர்..

யார் வந்தேறிகள்? யார் சாதி வெறியன்?
யார் மதவாதி? யார் இனவாதி?
என்று ஆளாளுக்கு தீர்ப்பு சொல்ல
சிறுதுளிகளாய் சேர்ந்த விஷம்
பேய் மழையாய் கொட்டித் தீர்த்தது..

வார்த்தைகளை உதிர்த்துவிட்டு
வாளேந்தி நின்றது மானுடம்…
பாய்ந்தோடும் குருதியாற்றின் ஓரம்
கூழாங்கற்களாய் தலைகளின் குவியல்

தோற்றவர்கள் இறந்துவிட
வென்றவர்கள் வெறுமையானார்கள்..

மீண்டும் இளைப்பாறல்
மீண்டும் சம்பாஷனை
குறைகளும் பிரிவுகளும் மட்டுமே
மீண்டும் கண்களில் தென்பட
ஆரம்பமானது அடுத்த வார்த்தைப் போர்…

இவனை அவன் வந்தேறி என்றான்
அவனை இவன் வந்தேறி என்றான்

இளைப்பாற வந்தேறிய மானுட சமூகத்தின்
இறுமாப்பை நினைத்து
இன்றும் எள்ளி நகையாடுகிறதாம்
இயற்கையின் மெளன சாட்சியான
ஆயிரம் வருட கால ஆலமரம்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -