யமுனா வீடு – 29

தொடர் கவிதை

- Advertisement -

எத்தனை நூற்றாண்டை கடந்து இங்கு வந்திருப்போம்
பெரும் நகரத்து நடைபாதையில் நடந்துகொண்டிருந்தேன்
இந்தப்பாதை போய்கொண்டே இருக்கிறது
கற்களை எடுத்து எறிவதுபோன்ற குரலில்
அலைபேசியில் பேசியபடி சிலர் கடந்து சென்றனர்
இதுவரை தொட்டிச் செடிகளை பார்த்த ஞாபகம் இல்லை
வெப்பநாவுகளை
மின் விளக்குகள் தனித்திருந்தன
யாரவது ஏதாவது கேட்கட்டுமே என்று
கால்கள் மறைந்துகொண்டிருந்தன
நலமா என்று விசாரித்தபடி ஒரு குரல் கடந்துசென்றது
ஞாபகப்படுத்திப்பார்க்க ஓரிரு முகங்கள் வந்து சென்றன
சுவற்றில் ஒரு யுவதியை வரைந்திருந்தனர்
சில்வண்டு ரீங்காரத்தையும் மின்மினிப்பூச்சியையும்
யமுனாவிடம் காட்டவேண்டும்
கைகளில் மடித்து வைத்திருந்த நெகிழிப்பையை சரசரக்க சரிபார்த்துக்கொண்டேன்
இந்த இரவில் உறங்கியிருக்காத அவளை
இன்னும் நான் பார்க்கவில்லை
எதேச்சையாக அழைத்துப் பேசியிருக்கலாம்
குறைந்தபட்சம் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருக்கலாம்
உன்னை வந்தடையும் என்னை உணர்கிறேன் யமுனா

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -